என்ன செய்து கிழித்தார் பெரியார்? – வே.மதிமாறன்
‘‘என்ன செய்து கிழித்தார் பெரியார்?’’
பனை ஏறும் தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில்
வேலை செய்பவர் கேட்டார்.
“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க”
இது
முடிவெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.
“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
பிராமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”
இப்படி ‘இந்தியா டுடே’ பாணியில்
கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே
டெலிபோன் டிபார்ட்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சை
செய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.
ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?
No comments yet
Leave a reply

